குற்றங்களை குறைப்பேன்: கோவையின் புதிய கமிஷனர் பூஜாரி உறுதி
கோவை: கோவை மாநகர காவல்துறை கமிஷனராக அம்ரேஷ் பூஜாரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கோவையில் குற்றங்களைக் குறைப்பதே தனது குறிக்கோள் என்று தெரிவி்த்தார்.
புதிய கமிஷனர்
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் சைலேந்திரபாபு. புதிய அரசு பொறுப்பிற்கு வந்ததும் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐ.ஜி.-ஆக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.-ஆக பணியாற்றி வந்த அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டார்.
அம்ரேஷ் பூஜாரி
கோவை மாநகர கமிஷனராக அம்ரேஷ் பூஜாரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரிடம், சைலேந்திரபாபு பொறுப்பை ஒப்படைத்தார். புதிய போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் பூஜாரி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். எஸ்.எஸ்.சி., (சைபர் க்ரைம்) மற்றும் எம்.பி.ஏ. படித்தவர். கடந்த 1991-ம் ஆண்டில் ஏ.எஸ்.பி.யாக பெரியநாயக்கன்பாளையத்தில் தன்னுடைய பணியை துவங்கினார்.
நெல்லை, தூத்துக்குடியில் பணியாற்றியவர். பதவி உயர்வுக்குப் பின் காஞ்சிபுரம், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் எஸ்.பி. யாகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சென்னையில் முதன்மை குடியுரிமைப்பிரிவு இயக்குனராகவும், மத்திய உளவுத் துறை( ஐ.பி.) துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். திண்டுக்கல், மதுரையில் டி.ஐ.ஜி.- ஆக பணியைத் தொடர்ந்த இவர் சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரியில் ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளார்.
சூளுரை
நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற அம்ரேஷ் பூஜாரி 'கோவை நகரில் மக்கள் அச்சமின்றி, அமைதியாக வாழ குற்றத் தடுப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும். சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். கிரிமினல்களின் கொட்டம் அடக்கப்படும். காவல் துறை பணிகளில் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்" என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications