ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒபாமா மன்னிப்பு

இதுகுறித்து அவர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது அமெரிக்கப் படை. இதில் பல அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர். இதுகுறித்து ஹமீத் கர்ஸாய் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் கர்ஸாயைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் ஒபாமா. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியானதற்காக ஆப்கானிஸ்தான் அதிபரிடம் பேசி மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்தார் ஒபாமா. குறிப்பாக ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவிகள் பலியானதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் என்றார்.
இரு தலைவர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மறு சீரமைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications