கேரளாவில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க தடை
கொல்லம்: கேரளாவில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்க தடை சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
கேரளாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், பீர் போன்ற மது வகைகளை கேரள மதுபான விற்பனை கழகம் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன.
இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இயஙகுகிறது. கடந்த 2009-2010ம் நிதியாண்டில் கேரளாவில் ரூ.5539.85 கோடிக்கு மது விற்றுள்ளது. 2010-11ம் நிதியாண்டில் இது ரூ.6730.30 கோடியாக அதிகரித்தது.
சமீபகாலமாக கேரளாவில் 14 வயதுக்கு குறைவான சிறுவர்கள் கூட மது குடிக்க தொடங்கியுள்ளனர். நகர்ப்புறங்களில் பெரும்பாலான பார்களில் எவ்வித அச்சமும் இன்றி சிறுவர்கள் மது அருந்தி செல்கின்றனர். எனவே சிறுவர்கள் மதுவுக்கு அடிமையாவதை தடுக்க 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்க கூடாது என்று சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே 18 வயது குறைவானர்களுக்கு மது விற்க கூடாது என சட்டம் உள்ளது. புதிய சட்டத்தை கடுமையாக அமுல்படுத்திட திட்டமிட்டுள்ளது. மது வாங்குபவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என கடை மேலாளருக்கோ, கடை விற்பனையாளருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அவர்களுக்கு மது கொடுக்க கூடாது. 21 வயது ஆகியிருந்தால் அதற்கான சான்றிதழை மேலாளரிடம் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் மது வழங்கப்படும்.
இதேபோல் பார்கள் இப்போது காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை திறக்கப்படுகிறது. இனிமேல் பார்களை 12 மணி நேரத்திற்கு மேல் திறந்து வைக்கவும் தடை விதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications