ஏமனில் இருந்து 66 இந்திய நர்சுகள் மீட்பு: கண்ணீர் மல்க பெற்றோர் வரவேற்பு
நெல்லை: ஏமன் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய நர்சுகளில் 2 தமிழக நர்சுகள் உள்பட 66 பேர் நாடு திரும்பினர்.
மூன்று நாட்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பி வந்ததாக நெல்லை திரும்பிய திசையன்விளை நர்சு நிர்மலா பிரின்சி தெரிவித்தார்.
ஏமன் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான இந்திய நர்சுகள் பாதிக்கப்பட்டனர். உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் அனைவரும் நாடு திரும்ப முடிவு செய்தனர். ஏமன் நாட்டில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தூதரகங்கள் முழு வீச்சில் களமிரங்கின.
இதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். இதில் தமிழக்கத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 64 பேர் என மொத்தம் 66 பேர் விமானம் மூலம் நேற்று முன்தினம் நாடு திரும்பினர். இதில் நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகள் நிர்மலா பிரின்சி நேற்று காலை நெல்லை வந்தார்.
அவரை பார்த்ததும் அவரது பெற்றோர், மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டித் தழுவி வரவேற்றனர். பின்னர் நர்ஸ் நிர்மலா பிரின்சி நெல்லை எம்பி ராமசுப்புவுக்கு நன்றி தெரிவிக்க குடும்பத்துடன் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கடந்த பிப்ரவரியில் ஏமன் நாட்டில் நர்ஸ் பணிக்கு சென்றேன். அங்கு ராணுவ மருத்துவமனையில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன். உள்நாட்டு கலவரத்தால் மருத்துவமனையை விட்டு வெளியே வரமுடியாமல் ஆயிரக்கணக்கான இந்திய நர்சுகள் சிறை கைதிகளானோம்.
எங்கள் கண் முன்னால் பலர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் உயிருடன் நாடு திரும்புவோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தினமும் நடக்கும் சம்பவங்களை பெற்றோர்களிடம் போனில் தெரிவி்த்து வந்தோம். ஒரு கட்டத்தில் செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. உணவு, குடிநீர் இல்லாமல் மூன்று நாட்கள் சிரமப்பட்டோம்.
இதனால் எங்களை மீட்க ராமசுப்பு எம்பி அவர்கள் முயற்சி எடுத்தார். ஊருக்கு வருவதற்கு முன்பு நான் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது பணம், உடமைகள் அனைத்தும் திருடு போயிருந்தன. கிடைத்த பொருட்கள், கல்வி சான்றிதழ்களுடன் 66 பேர் நாடு திரும்பினோம். நான் பணியாற்றிய சானா மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட இந்திய நர்சுகள் பணியாற்றுகின்றனர்.
குண்டுவீச்சில் காயமடைந்த அதிபர் வெளிநாட்டில் சிகிக்சை பெறுவதால் நிலைமை தற்போது கட்டுக்குள் அடங்கி உள்ளது. இன்னும் பலர் நாடு திரும்பாமல் உள்ளனர். எங்களுக்கு 2 மாத சம்பளம் தரவில்லை. அதை பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக இந்திய தூதரக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications