ஜெயலலிதாவுக்கு புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் பாராட்டு மழை
மதுரை: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக புரட்சிகரமான தீர்மனங்களை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
இது குறித்து புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் மகிழ்ச்சியடையும் வகையில், தமிழக சட்டசபையில் இலங்கையில் போர்க் குற்றம் புரிந்தவர்களை போர் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல் மிக்க செயல் பெரிதும் வரவேற்கத்தக்கது.
தமிழர்களை பாதுகாக்க யாரும் இல்லை என்னும் நினைப்பில் அவர்களை அழித்து வரும் ராஜபக்சே இனியாவது தன்னை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் இரவில் இந்திய எல்லை தெரியாமல் சென்று மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதும், அவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டு உடைமைகள் கொள்ளை அடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது.
இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்பதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பினை அளிக்க முயற்சி மேற்கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழர்களும், மீனவர்களும் நன்றியை காணிக்கையாக்குகின்றனர்.
தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகின் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் உடனே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வருக்கு புதிய நீதிக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications