ஒசாமா குறித்து சிஐஏவுக்கு தகவல் அளித்தவர்களை கைது செய்த ஐஎஸ்ஐ!

பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் பின்லேடன் தங்கியிருந்த வீட்டை அமெரிக்கப் படையினர் தாக்கி ஒசாமாவை கொன்றனர். அதற்கு முன் பின்லேடனை அருகாமையில் உள்ள ஒரு வீட்டிலிருந்தபடி அமெரிக்க உளவுப் பிரிவினர் (இவர்களில் பலர் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்) கண்காணித்து வந்தனர்.
பின்லேடனை அமெரிக்கப் படைகள் கொல்வதற்கு முன்பாகவே இந்த வீட்டின் உரிமையாளரையும் மேலும் 4 பேரையும் ஐஎஸ்ஐ கைது செய்துள்ளது. இதன்மூலம் ஒசாமா குறித்து அவர்கள் சிஐஏவுக்கு தகவல் அளித்து வந்தது ஐஎஸ்ஐக்கு முன்பே தெரிந்துள்ளது என்று அமெரிக்கா கருதுகிறது. மேலும் ஐஎஸ்ஐயின் உதவியுடன் தான் ஒசாமா அங்கு தங்கியிருக்க வேண்டும் என்பதும் இந்தக் கைதுகள் மூலம் உறுதியாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் தவிர ஒசாமா குறித்து சிஐஏவுக்குத் தகவல் தந்து வந்த பாகிஸ்தானியர்கள் சிலரும் ஐஎஸ்ஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஐஏ தெரிவித்துள்ளதாக நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க இஸ்லாமாபாத் வந்த சிஐஏ இயக்குநர் லியோன் பெனட்டா இது குறித்து பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications