முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி

திமுக தேர்தல் அறிக்கையை தூக்கிச் சாப்பிடும் வகையில் வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சம் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறித் திட்டம்தான். இத்திட்டத்தை தற்போது அமலாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இது வழங்கப்படுகிறது.
ரேஷனில் அரிசி வாங்கும் தகுதி பெற்ற குடும்பங்களுக்கு இந்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கவுள்ளது அரசு. தற்போது ரேஷனில் அரிசி வாங்குவோரின் எண்ணிக்கை 1.83 கோடியாக உள்ளது. படிப்படியாக இவர்கள் அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும்.
ரேஷன் கடைகள் மூலம் இவற்றைக் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்கள் மூலமாக இவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வாங்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. டேபிள் டாப் வெட் கிரைண்டர், மிக்சி டெண்டர் கேட்பவர்கள் ரூ.10 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும். மின்விசிறி சப்ளை செய்ய விரும்புபவர்கள் ரூ.5 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 21ம் தேதி இந்த இலவசப் பொருட்களின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டெண்டர் கேட்பவர்களுக்கு விளக்கிச் சொல்லப்படவுள்ளது. அதன் பின்னர் ஜூலை 11ம் தேதிக்குள் டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதன் பின்னர் டெண்டர் கேட்டுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பொருட்கள் வாங்கப்படும்.
செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 7 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கித் தொடங்கி வைப்பார்.












Click it and Unblock the Notifications