ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தடியடி நடத்தவில்லை-டெல்லி போலீஸ்

ஊழலுக்கு எதிரான காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜூன் 4ம் தேதி தொடங்கினார் ராம்தேவ். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அன்று நள்ளிரவில் அங்கு குவிந்த டெல்லி போலீஸார் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி ராம்தேவை அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி அடுத்த நாள் ஹரித்வாரில் கொண்டு போய் விட்டு விட்டனர்.
மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பிரயோகித்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அது கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லி காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் டெல்லி காவல்துறை நடக்கவில்லை. அன்று இரவு நடந்த பெரும் குழப்பத்திற்கும், வன்முறைக்கும் பாபா ராம்தேவ்தான் காரணம்.
போலீஸாருடன் வராமல், கூட்டத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றார் ராம்தேவ். இதனால்தான் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் ராம்தேவின் ஆதரவாளர்கள் கற்களையும், பூத்தொட்டிகளையும் எடுத்து போலீஸார் மீது வீசித் தாக்கினர். அதைத் தடுக்க போலீஸார் முயன்றபோது அவர்களைத் தாக்கவும் முயன்றனர். இருப்பினும் கூட போலீஸார் தடியடி நடத்தவில்லை. பொறுமை காத்தனர்.
முகாமின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் வன்முறையில் 39 பொதுமக்கள், 23 போலீஸார் என 72 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications