1, 6-வது மாணவர்களுக்கான சமச்சீர் புத்தகத்தில் செம்மொழி மாநாட்டு சின்னம் மறைப்பு
சென்னை: 1 ,6ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களை வழங்கும் முன்னர் அந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில் உள்ள செம்மொழி நாட்டு சின்னத்தை மறைக்க ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி
தமிழ்நாட்டில் 1 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியை முந்தைய அரசு அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு 1 மற்றும் 6 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல் முதலாக சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தியது. இந்த ஆண்டு 2,3,4,5,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன.
ஆனால் சமச்சீர் கல்விப்பாடத்திட்டம் தரமாக இல்லை என்றும் அதனால் அந்த திட்டத்தை நிறுத்திவைத்து பின்னர் அதில் மாற்றம் கொண்டுவரவும் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு முடிவு செய்தது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆனால் இது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் 1 மற்றும் 6-வது வகுப்புக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 1 மற்றும் 6-வது வகுப்புக்கு ஏற்கனவே தயாராக உள்ள பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆனால் அந்த பாடப்புத்தகங்களின் பின்பக்க அட்டையில் செம்மொழி மாநாட்டு சின்னமான திருவள்ளுவர் உருவ சிலை மற்றும் இலக்கிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதனை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்..
பாடப்புத்தகத்தில் உள்ள பெயர்கள்
இந்த பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் மற்றும் அவர் அறிமுகம் செய்த திட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பகுதியை என்ன செய்யலாம் என்ற யோசனை அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது.
இவை நீக்கப்படுமா? அல்லது அந்த பக்கங்கள் ஸ்டிக்கர் போட்டு ஒட்டப்படுமா என்பது பின்னர் தெரியும்.












Click it and Unblock the Notifications