சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்

அதே போல 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முறைகேடு செய்திருப்பதால், அவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கராத் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மத்தியிலும், மாநிலத்திலும் போதுமானதாக இல்லை. லோக்பால் மசோதாவிலும் அசிரத்தையான போக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது. வரும் லோக்சபா கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவில் பிரதமர் உள்பட அனைவருமே லோக்பால் மசோதா வரையறைக்கு உட்பட்டவர்களே. எனவே, உடனடியாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும், இடதுசாரிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க விகிதம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது.
தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் முறைகேடு செய்துள்ளார். இதனால் அவர் தொடர்ந்து மத்திய அமைச்சராக நீடிக்க கூடாது.
2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர்களின் பட்டியல் இன்னும் நீள்கிறது. சி.பி.ஐ. விரைவில் மற்றொரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அடுத்ததாக இயற்கை எரிவாயு அனுமதி வழங்கியதில் 2வது ஊழல் அம்பலமாகி உள்ளது. இதனால் அரசுக்கு பெருந்தொகை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை மூலம் கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமீபத்தில் ஹைதராபாத்தில் கூடிய எங்கள் கட்சி குழு இதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இடதுசாரி கட்சிகள் ஒற்றுமையே மிக முக்கியம். ஏற்கனவே நாங்கள் பல விஷயங்கள் மீது ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இது தொடரும் என்றார்.
இதுபோன்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக இடதுசாரி கட்சிகள் இணைந்து விரைவில் டெல்லியில் கூட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications