புதுச்சேரியில் அக்னி வீரர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம்.. சென்னை சுற்றுவட்டார இளைஞர்களுக்கு அழைப்பு
புதுச்சேரி: அக்னி வீரர் பணிக்கு வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஆட்சேர்ப்பு முகாம் புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற போகிறது. இந்த ஆட்சேர்ப்பு முகாமில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரியை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு சென்னை மண்டல தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு சென்னை மண்டல தலைமையகம் சார்பில் புதுச்சேரி அரசின் ஒத்துழைப்புடன் அக்னிவீரர் அனைத்து பிரிவு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த ஆட்சேர்ப்பு முகாமில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரியை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளார்கள். மத்திய பிரிவுகளான சிப்பாய் பார்மா, ராணுவ நர்சிங் உதவியாளர், நர்சிங் உதவியாளர் (கால்நடை), ஹவில்தார் பணிகளுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
கடந்த மாதம் நடந்த பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களும் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கு பெற வேண்டும். தேர்ச்சி முடிவுகள் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். இதற்காக காத்துருக்காமல் ஆட்சேர்ப்பு செயல்முறையின் இரண்டாம் கட்டத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தப்படுகிறார்கள். 2-ம் கட்டத்தில் உடற்தகுதி தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு, மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே கல்வி, இருப்பிடம், ஆதார் அட்டை, புகைப்படங்கள், என்.சி.சி., விளையாட்டு சான்றிதழ்கள் (தேவைப்பட்டால்) மற்றும் பிற கட்டாய ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான்ன தேர்வு, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து கட்டங்களிலும் விண்ணப்பதாரர்கள் வெளிப்படுத்தும் தகுதி மற்றும் செயல் திறன் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சி.இ.இ. தேர்வு முடிவுகள், அனுமதி அட்டைகள், ஆட்சேர்ப்பு முகாம் அட்டவணை மற்றும் பிற முக்கிய அறிவுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளத்தை ( www.joinindianarmy.nic.in ) தொடர்ந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications