விரைவில் சோனியாவை சந்தி்ப்பேன்-புதுவை முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: காங்கிரசிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்துவிட்டாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவேன் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் இவரது என்.ஆர்.காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 17 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தேர்தல் ஆணையம், அகில இந்திய என்.ஆர்.காங்கிரசை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.
இந் நிலையில் ரங்கசாமி அளித்த பேட்டி:
கேள்வி: அமைச்சரவையில் மீதமுள்ள ஒரு அமைச்சர் எப்போது நியமிக்கப்படுவார்?
பதில்: விரைவில் நியமிக்கப்படுவார்.
கேள்வி: அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் எப்போது ஒதுக்கப்படும்?
பதில்: விரைவில் கொடுக்கப்படும்.
கேள்வி: நியமன எம்.எல்.ஏக்கள் பட்டியல் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுவிட்டதா?
பதில்: அனுப்பிவிட்டோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்படுவார்கள்.
கேள்வி: அரசு நிதிப் பற்றாக்குறையில் இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: நிதி நிலைக்கேற்ப மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் அதிக நிதி பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: டெல்லிக்கு எப்போது செல்வீர்கள், மத்திய அமைச்சர்களை சந்திப்பீர்களா?
பதில்: விரைவில் செல்ல உள்ளேன். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெறுவேன்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் சோனியாவை சந்திப்பதில் பிரச்சினை ஒன்றும் இல்லையா?
பதில்: காங்கிரஸ் தலைவி சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் ஒன்றும் தவறில்லை.
கேள்வி: சமச்சீர் கல்வி திட்டம் புதுவையில் தொடர்கிறதா?
பதில்: சமச்சீர் கல்வி திட்டத்தில் தமிழகத்தில் என்ன நிலைப்பாடோ அதே தான் புதுவையிலும் பின்பற்றப்படும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
தனது அமைச்சரவையில் அதிமுகவுடன் இடம் தர ரங்கசாமி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications