கனிமொழிக்கு விடிவு பிறக்குமா?-நாளை ஜாமீன் மனு விசாரணை

கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.செளஹான் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரிக்கவுள்ளது. முன்னதாக நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இதை விசாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் திடீரென விலகிக் கொள்வதாக அறிவிக்கவே சிங்வி, செளஹான் பெஞ்சுக்கு இந்த விசாரணை மாற்றப்பட்டுள்ளது.
நாளை கனிமொழியின் ஜாமீன் மனுவை இந்த பெஞ்ச் விசாரிக்கவுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்வி சில கடுமையான கேள்விகளைக் கேட்கக் கூடும் என்பதால் கனிமொழி தரப்பு சற்று பீதியுடனேயே உள்ளது.
நாளை வழக்கில் கனிமொழிக்கு சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் அவர் திஹார் சிறையை விட்டு வெளியே வரும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் கருணாநிதி குடும்பத்தாரும் பெரும் கவலையுடன் உள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு சினியுக் நிறுவனம் கொடுத்த ரூ. 214 கோடி தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் கூட்டுச் சதியாளர்கள் என சிபிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications