''ராமதாசை நம்பினால் நடுக்கடலில் தள்ளிவிடுவார்''
திண்டிவனம்: பாமக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இருவரை அக் கட்சி தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது.
எடப்பாடி தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வை. காவேரி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மேச்சேரி மே.ப. காமராஜ் ஆகியோருக்கும் பாமக தலைமைக்கும், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த சில நாட்களாக பனிப் போர் நடந்து வந்தது.
தேர்தல் தோல்விக்கு காரணம் பா.ம.க வின் தலைவர் மணிதான் காரணம் என்றும், ராமதாசை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குகிறார் என்றும், கடந்த வாரம் சேலத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார் காவேரி.
இந் நிலையில் இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து பாமக தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது. இது குறித்து பா.ம.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பா.ம.க. கட்சியின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான வை. காவேரி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மேச்சேரி மே.ப. காமராஜ் ஆகியோர் கட்சி கட்டுப்பாடை மீறி கட்சிக்கு அவப்பெயரும், களங்கமும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருவதால், இவர்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனைப்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதலான அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
பா.ம.க.வினர் யாரும் இவர்களோடு எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இருவரும் முன்பு திமுகவுக்கு பெரும் குடைச்சல் கொடுத்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர்களது ஆதரவாளர்கள் சிலரும் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
நடுக்கடலில் தள்ளிவிடுவார்-மாஜி எம்எல்ஏ:
இது குறித்து காவேரி கூறுகையில், வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் நான் இந்த இயக்கத்தில் போராளியாக இருந்துள்ளேன். ராமதாஸ் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன். வன்னியர் சங்கமாக ஆரம்பித்த காலத்தில் இருந்தவர்கள் இப்போது கட்சியில் யாரும் இல்லை. எல்லோரும் வெளியே போய்விட்டார்கள்.
என்னை கட்சியிலிருந்து நீக்கியதன் காரணம், நான் கட்சியின் தலைவர் கோ.க.மணியை விமரிசனம் செய்தேன் என்பதுதான். போலீசார் ஒருவனை பிடிச்சதும் விசாரனையில்லாமல் சுட்டுக்கொல்வதை என்கவுண்டர் என்கிறோம், அதுபோலதான் எனக்கும் நடந்துள்ளது.
கட்சிக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள், சிறைசென்றவர்கள் யாரையும் ராமதாஸ் பார்ப்பதும் இல்லை, அவர்களிடம் பேசுவதும் இல்லை, கூட்டத்தை கூட்டினால் மேல நின்று பேசிவிட்டு சென்று விடுகிறார்.
தீர்க்கதரிசியாக இருந்த ராமதாசை, கோ.க.மணி பேராசைக்காராக மாற்றிவிட்டார், அதனால் தான் என்னைப் போன்ற சாதாரணமானவர்கள் ராமதாசை பார்க்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை.
தைலாபுரம் தோட்டம் முதலாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது. சாதாரண பொதுமக்கள் ராமதாசை நம்பினால் அவர்களை நடுக்கடலில் தள்ளிவிடுவார்.
டாக்டர் ராமதாசையும், பா.ம.கவையும் கோ.க மணியிடமிருந்து காப்பாற்றவேண்டும், அதனால் நான் வேறு இந்த கட்சிக்கும் போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications