பிஎச்இஎல்லில் 5 ஆண்டுகளில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு
டெல்லி: அரசு நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி.பி.ராவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து கூறுகையில், "பி.எச்.இ.எல் நிறுவனத்தில் தற்போது 46 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இப்போது எங்கள் நிறுவனம் 15 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின்பொருள்களை உற்பத்தி செய்ய ஆர்டர்கள் உள்ளன. அடுத்த நிதியாண்டில் பி.எச்.இ.எல் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட உள்ளது. அதற்கேற்ப 20 மெகாவாட் திறன்கொண்ட மின்பொருள்களை உருவாக்குவதற்கான ஆர்டர்களையும் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இதற்காகப் புதிய பணியாட்களை நியமிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்கிற விகிதத்தில் பணியாள்களை நியமிக்க முடிவெடுத்துள்ளோம். இதில் ஆயிரம் என்ஜினியர்கள், ஆயிரம் பட்டயப் படிப்பு படித்தவர்கள், 2 ஆயிரம் ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்படுவர்.
பி.எச்.இ.எல். நிறுவனத்தின் மொத்த ஆர்டர்களின் மதிப்பு ரூ. 1.64 லட்சம் கோடியாக உள்ளது," என்றார்.
இந்நிறுவனத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 2,500 பேர் ஓய்வு பெற்று வருகின்றனர். இதை ஈடுகட்டுவதுடன் புதிய உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றவும் மேலும் பல ஆயிரம் பணியாளர்கள் தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications