கருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஜெயலலிதா
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி 2006ம் ஆண்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இது அவதூறு அறிக்கை என்று ஜெயலலிதா மீது 2007ம் ஆண்டில் கருணாநிதி சார்பில் அப்போதைய சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா 17.1.07 அன்று மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் பொதுத்துறை செயலாளர், சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல், கருணாநிதி ஆகியோரை பிரதிவாதியாக ஜெயலலிதா சேர்த்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா விரும்புவதாகக் கூறினார். அதற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிபதி பி.ஜோதிமணி, ஜெயலலிதா தான் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications