குண்டாறு அணையில் குடிகாரர்கள் அட்டகாசம்!: சுற்றுலா பயணிகள் அவதி
செங்கோட்டையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது குண்டாறு அணை. இயற்கை எழில் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இதமான சாரலுடன், குளிர்ந்த தென்றல் காற்றும் மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் தமிழக கேரள மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குண்டாறு பகுதிக்கு வந்து செல்வர்.
குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். இந்நிலையில் மது அருந்தி விட்டு இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அச்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு கலட்டா செய்வது, சேதம் விளைவிப்பது, அத்துமீறி வனப்பகுதியில் நுழைவது அணை நீர் வழிந்தோடும் பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
தற்போது குற்றாலம் சீசன் துவங்கி வி்ட்டதை அடுத்து தமிழக கேரள மாநிலங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வருவர். எனவே சுற்றுலா பயணிகள் நலன் கருதி அணைக்கட்டு பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications