நிபந்தனையை பூர்த்தி செய்தால் என்னுடன் ராம்தேவும் உண்ணாவிரதம் இருக்கலாம்- ஹஸாரே

ராம்தேவால் தற்போது அன்னா ஹஸாரே குழுவினருக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் நடத்திய போராட்டம் பெரும் அமளி துமளியானது. வன்முறை நடந்தது ஒருபக்கம் இருக்க அவரது போராட்டத்திற்கு பாஜக உள்ளிட்ட சங் பரி்வார் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது.
அதை விட முக்கியமாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவரான சாத்வி ரிதம்பரா நேரில் வந்து ராம்தேவ் அருகில் அமர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் மேலும் சர்ச்சையானது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 16ம் தேதி அன்னா ஹஸாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அவருடன் நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ராம்தேவும் கூறியுள்ளார். இதனால் அன்னா குழுவினர் கடும் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.
ராம்தேவ் வந்தால் போராட்டம் திசை திருப்பப்படும், சாயம் பூசப்படும், போராட்டத்தின் நோக்கம் சீர்குலைந்து போய் விடும் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.
இதனால் ராம்தேவுக்கு சில நிபந்தனைகளை அன்னா ஹஸாரே விதித்துள்ளார். இதுகுறித்து அவர் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் கூறுகையில், ராம்தேவ் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு அவர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதன் பிறகே அவரது விருப்பத்தை ஏற்று எங்களுடன் போராட்டத்தில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து தீர்மானிக்க முடியும் என்றார் அன்னா.
அடுத்த முறை போராடும்போது போலீஸார் எங்களைத் தாக்கினால் திருப்பித் தாக்க 11,000 பேர் கொண்ட ஆயுதப் படையை உருவாக்குவோம் என்று டெல்லி போராட்டத்திற்குப் பின்னர் அறிவித்தார் ராம்தேவ். இதை உடனடியாக கண்டித்த அன்னா ஹஸாரே, இதுபோன்ற வன்முறைகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவு தர மாட்டோம் என்று கண்டிப்புடன் கூறியது நினைவிருக்கலாம்.
டெல்லி சம்பவத்திற்குப் பின்னர் ராம்தேவால் தற்போது தலைநகரில் தனியாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தை நடத்த முடியாத நிலை உருவாகி விட்டது. எனவேதான் அவர் அன்னாவுடன் இணைந்து கொள்ள முயல்வதாக தெரிகிறது. ஆனால் ராம்தேவால் தங்களது போராட்டத்திற்கு களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அன்னா ஹஸாரே குழுவினர் மிகுந்த கவனத்துடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications