பத்திரிக்கையாளரைக் கொல்லச் சொன்னது சோட்டா ராஜன்: மும்பை போலீஸ் தகவல்

பத்திரிக்கையாளர் டே கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ரூபேஷ் தங்கபானி(எ) சதீஷ் காலியா, அனில் வாக்மோடே, அருண் தாகே, சச்சின் கெய்க்வாட் மற்றும் மங்கேஷ் பகப் ஆகியோர் கைதானவர்களில் அடக்கம்.
அந்த 7 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் ஜூலை 4-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறி்தது மும்பை கமிஷனர் ஹிமான்ஷு ராய் கூறியதாவது:
சதீஷ் காலியா தான் கொலையை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளி. கொலை நடந்த 20 நாட்களுக்கும் முன் சோட்டா ராஜன் காலியாவை தொடர்பு கொண்டு ஒரு கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளான். ஆனால் யாரை என்று தெரிவிக்கவில்லை. இந்த தகவல் காலியாவிடம் விசாரித்ததில் தெரிய வந்தது.
பின்னர் ராஜன் காலியாவுக்கு அதிநவீன துப்பாக்கியும், ரூ. 2 லட்சம் ரொக்கமும் கொடு்ததுள்ளான். பணமும், ஆயுதமும் கிடைத்தவுடன் காலியா அனிலை தொடர்பு கொண்டுள்ளான். அனில் தான் மற்ற 5 பேரை வரவழைத்தான்.
அந்த 7 பேரும் ஒரு இடத்திற்கு வந்தவுடன் கடந்த 6-ம் தேதி ராஜன் காலியாவை போனில் தொடர்பு கொண்டு கொல்ல வேண்டியவரின் அடையாளம் மற்றும் அவரது மோட்டார்சைக்கிள் எண்ணைக் கொடுத்துள்ளான். கொலை செய்ய வேண்டியவரை பெனின்சுலா சென்டர் மற்றும் ஹிராநந்தினி காம்பிளக்சில் காணலாம் என்றும் கூறியுள்ளான்.
ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் டேயை பெனின்சுலா சென்டரில் பார்த்தும் அங்கு ஒரே கூட்டமாக இருந்ததால் அவர்கள் கொல்லவில்லை. ஜூன் 9, 10 தேதிகளில் கொலையாளிகள் 3 பைக்குகள் மற்றும் 1 டொயோட்டா குவாலிஸ் வண்டியில் ஹிராநந்தினி பகுதியில் டேயை தேடி அலைந்துள்ளனர். கடந்த 11-ம் தேதி ஹிராநந்தினி அருகே பார்த்தவுடன் அவரை பின் தொடர்ந்துள்ளனர். இறுதியில் காலியா கிரிசில் ஹவுஸில் வைத்து டேயை 5 தடவை சுட்டுள்ளான். அதில் ஒரு குண்டு டேயின் இதயத்தை துளைத்ததால் அவர் இறந்தார்.
கொலையாளிகளுக்கு டே யார், என்ன செய்கிறார் என்ற விவரமே தெரியாது. ஜூன் 11-ம் தேதி இரவு டிவியைப் பார்த்து தான் அவர் பத்திரிக்கையாளர் என்றே தெரிந்துகொண்டனர். கொலையாளிகளுக்கு சோட்டா ராஜன் மேலும் ரூ. 3 லட்சம் கொடுத்துள்ளான்.
பணத்தைப் பெற்ற பிறகு 2 பேர் மும்பையில் தங்கிவிட்டனர். 5 பேர் மகாராஷ்டிரா, தமிழ் நாடு மற்றும் கேரளாவில் உள்ள கோயில்களுக்கு சென்றனர்.
இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும் மும்பை போலீஸ் அவர்களை ராமேஸ்வரம், சோலாபூர் மற்றும் மும்பையில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படு்ததிய துப்பாக்கியும், 3 பைக், குவாலிஸ் கார் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது," என்றார்.












Click it and Unblock the Notifications