இன்னொரு 9/11 தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஒசாமா: அமெரிக்கா கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: 9/11 தாக்குதலின் 10-வது நினைவு நாளில் அமெரிக்காவில் அதே போன்று ஒரு தாக்குதல் நடத்த ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
அல் கொய்தா முக்கிய விடுமுறை நாட்கள் மற்றும் உலக வர்த்தக மையத் தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு நாளன்று தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒசாமாவின் அப்போத்தாபாத் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து ஒசாமா வரும் செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது என்று தி நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் 4-ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம். அன்று அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்போவதாக எந்த குறிப்பிட்டத் தகவல்களும் கிடைக்கவில்லை என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வைத்து பின் லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் 3 விஷயத்தை எதிர்பார்க்கின்றனர்.
1. அவர் இறக்கும் முன் ஏதாவது சதி திட்டம் தீட்டினாரா?
2. ஏமன் மற்றும் சோமாலியாவில் இருக்கும் அல்கொய்தாவினர் லேடன் இடத்தை நிரப்ப ஏதாவது தாக்குதல் நடத்துவார்களா?
3. வரும் செப்டம்பர் 11-ம் தேதி லேடன் சாவுக்கு பழிவாங்குவதாகக் கூறி யாராவது ஒருவர் தாக்குதல் நடத்துவாரா?
எப்படி இருந்தாலும், எந்த நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது அமெரிக்கா.