கன்னியாகுமரி மீனவர்களை கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடி: கன்னியாகுமரி விசைப்படகுகள் தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்தூமீறி தங்கி மீன்பிடிப்பதை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதில் தூத்துக்குடியில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்தும் தினமும் காலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லும். இரவு 9 மணிக்குள் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, தங்கி மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை. இந்நிலையில் தற்போது 45 நாட்கள் தடை காலத்திற்கு பின்னர் மீண்டும் விசைப்படகுகள் மீ்ன்பிடிக்க சென்று வருகின்றன.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்துள்ள ராமநாதபுரம் மற்றும் குமரி மாவட்டத்தில் விசைபடகுகள் இரவு நேரத்தில் கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி உள்ளது. இதனால் குமரி மாவட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி வந்து இரவு நேரத்தில் தங்கி மீன்பிடிக்கின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளுக்குள் நுழைந்து தங்கி மீன்பிடிக்கும் குமரி மாவட்ட விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகளையும் தங்குகடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும் என விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் கூறுகையில்,
இந்த பிரச்சனை குறி்த்து விசைப்படகு உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம். இன்று வழக்கம்போல் கடலுக்கு செல்கிறோம். நாளை (30-ம் தேதி) மாலை இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தொடர நேரிடும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications