பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த மதிமுக நிர்வாகி கைது
கோவை: கோவை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த மதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுசீலா. இவர் நேற்று முன்தினம் இரவு போலீசாருடன் தொண்டாமுத்தூர் கெம்பனூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது முத்திப்பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மடக்கி போலீசார் விசாரித்தனர். உடனே அவர் மதிமுக மாவட்ட துணை செயலாளர் கெம்பனூர் கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கதிரவன் மற்றும் அவரது உதவியாளர்கள் முருகேசன், சிவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுசீலாவிடம் கதிரவன் வாக்குவாதம் செய்தார். மேலும் சுசீலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.
துணை சூப்பிரண்டு சண்முகவேல், இன்ஸ்பெக்டர் துரைசுந்தரம் ஆகியோருக்கு இது குறி்த்து சுசீலா தகவல் தெரிவித்தார்.
துணை சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மதிமுக துணை செயலாளர் கெம்பனூர் கதிரவன், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த துரைசாமி மற்றும் முருகேசன், சிவராஜ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் கதிரவன், துரைசாமி, முருகேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் சிவராஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications