அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்

அரசு கேபிள் டிவியை இன்னும் 3 மாத காலத்தி்ற்குள் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசமுள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.
கேபிள் டிவி நாட்டுடமையாக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேபிள் டிவியை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியிலேயே கேபிள் டிவியை நாட்டுடமையாக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது.
எனவே, இம்முறை கேபிள் டிவியை நாட்டுடமையாக்குவதில் முனைப்பாக உள்ளார்.
கடந்த 22-ம் தேதி அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கேபிள் ஆபரேட்டர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.
கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி அரசு கேபிள் டிவியை 3 மாதத்திற்குள் துவங்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முதல்கட்டமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.
இவ்வாறு செய்ததன்மூலம் அரசு கேபி்ள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனது நேரடிப் பார்வையில் இருக்கும். மேலும், அரசு கேபிள் டிவியைத் துவங்குகையில் ஏற்படும் இடையூறுகளை உள்துறையின் கீழ் உள்ள காவல் துறை மூலம் நீக்கி விடலாம் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் தான் அரசு கேபிள் டிவி கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த அறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
இவ்வளவு செலவு செய்து அமைத்த கட்டுப்பாட்டு அறைகள் தற்போது இயங்காமல் உள்ளன. இவற்றை இயக்க குறைந்த பட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ. 100 கோடி வீதம் ரூ. 400 கோடி செலவாகும். இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் அளித்த வாக்குறுதிபடி 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் இனி கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களையும் மக்கள் மிகக்குறைந்த விலையில் கண்டு களிக்கலாம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications