தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: சரக்கு போக்கவரத்து பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் டோல்கேட்டை அகற்றக் கோரி லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 800 லாரிகள் ஓடவில்லை.
தூத்துக்குடி-மதுரை இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தூத்துக்குடி மாநகரையொட்டி சுங்கவரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் செயல்படத் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் லாரி உரிமையாளர்கள் சாலைப் பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பு வரிவசூலிக்கக் கூடாது என்றும், வரி வசூல் மையம் மாநகருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அதனை மாற்ற வேண்டும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உதவி கலெக்டர் சஜ்ஜன் சிங் தலைமையில் இன்று லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேசிய உதவி கலெக்டர் லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடம் தூத்துக்குடி சுங்கவரி வசூல் மையம் அருகே உள்ளது. அந்த இடத்தில் தனியாக சாலை அமைத்து அதன் வழியாக லாரிகள் மற்ற வாகனங்கள் சென்று வர அனுமதிப்பது, சுங்கவரி வசூல் மையத்தை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 800 லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications