சிறுவன் தில்ஷனைக் கொன்ற ராணுவத்தினரைக் கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: சென்னை தீவுத் திடல் ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் 13 வயது சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீவுத் திடலில் உள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் பாதாம் பழங்களை எடுக்கச் சென்ற தில்ஷன் என்ற 13 வயது சிறுவனை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் குற்றவாளியைக் கைது செய்ய விடாமல் ராணுவத் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீஸார் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் நடந்து 2 நாட்களைத் தாண்டி விட்ட நிலையில் சுட்டது யார் என்பது தெரியாமல் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபமும், அதிருப்தியும் நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழக மக்கள் உரிமைக் கழக தலைவர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சென்னை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில தில்ஷான் (என்ற சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு காரணமான நபரை கைது செய்ய மாநில போலீசார் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். ருப்பினும், ராணுவ அதிகாரிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
சிறுவனின் இறப்பு சான்றிதழில் குண்டு காயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் துப்பாக்கியால் சுட்டதால் மாணவன் உயிரிழந்ததும், ராணுவக் குடியிருப்பு வளாகத்திலேயே சிறுவன் இறந்திருப்பதும் தெளிவாகிறது.
அப்பாவி சிறுவன் ராணுவக்குடியிருப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல். நாட்டை காக்க வேண்டிய ராணுவ வீரர்கள் குடியிருப்பில் ஒரு சிறுவனின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.
இதுபோன்ற மோசமான சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்யத் தவறியதும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க ராணுவ அதிகாரிகள் தவறியதும் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.
ஆகவே, சிறுவனின் சாவுக்கு காரணமான ராணுவ வீரரை உடனடியாக கைது செய்யும் படி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications