மின்சாரத்தை உபரியாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம்-ஜெயலலிதா

இந்திய தொழில் துறை கூட்டமைப்பான சிஐஐயின் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியது. இதைத் துவக்கி வைத்துப் பேசிய ஜெயலலிதா,
நாங்கள் ஆட்சிக்கு வந்து 50 நாட்கள்தான் ஆகிறது. என்றாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நான் எற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்தபோது தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களை வகித்தோம்.
இதனால் மோட்டார் வாகன உற்பத்தி தொழிலிலும், அதை சேர்ந்த தொழிலிலும், எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியிலும் தமிழகம் முக்கிய இடம் பெற்றது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வகுத்த கொள்கையின் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்தன.
கடந்த முறை நான் ஆட்சியில் இருந்தபோது வெளியான புள்ளி விவரப்படி தமிழ்நாடு அரசு முதலீட்டை ஈர்த்து தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெற்ற மாநிலமாக இருக்கிறது என்ற பெருமையை பெற்றது. அது போன்று மீண்டும் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறும் மாநிலமாக மாற்ற தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
உற்பத்தித் துறை உள்பட அனைத்துத் தொழில் துறைகளிலும் தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வர இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. தமிழகத்தை இந்த நாட்டின் ஒரு மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்ட நாங்கள் தீவிரமாக உள்ளோம்.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் தொழில்துறை வளர்ச்சி 9 முதல் 9.5 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த அளவு வளர்ச்சியை அடைய உற்பத்தித் துறையின் வளர்ச்சி 11 முதல் 12 சதவீதமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இதற்கு முதலில் புதிய முதலீடுகள் கொண்டு வரப்பட வேண்டும். தொழி்ல் துறையினரான உங்களது வளத்தைப் பெருக்க மிகச் சரியான இடமாக தமிழகம் மாற்றப்படும். முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்.
கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இப்போது மாநிலத்தை தொழில்மயமாக்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கடும் போராட்டத்தில் நான் ஈடுபட்டுள்ளேன்.
கார்பரேட் துறையினருக்கு மிக சாதகமான மாநிலமான தமிழகம் மாற்றப்படும். இதற்கு மின் தடை உள்ளிட்ட பல பிரச்சனைகள் தடையாக உள்ளதை நான் அறிவேன். இதை சமாளித்து நீங்கள் வெற்றி பெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மின் வெட்டுக்களால் தொழில்துறையினரிடையே நிலவும் அதிருப்தியை, பதற்றத்தை நான் உணர்ந்துள்ளேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக இருந்தது மின் தடை தான். இந்தப் பிரச்சனையை தீர்க்க எனது அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளது.
மின் வெட்டை தீர்ப்பது மட்டுமல்ல, மின்சாரத்தை உபரியாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம்.
நான் முதல்வராக பதவியேற்றது முதலே தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில்துறையினர் இடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.
தமிழ்நாட்டில் ஏழ்மையும், வறுமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எனது அரசின் லட்சியம். கடந்த முறை நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வறுமையை ஒழிக்க 15 அம்சத் திட்டங்களை செயல்படுத்தினோம். அதனால் பசி இல்லாத நிலைமை ஏற்பட்டது. வறுமையும் குறைந்தது. 2015ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும். பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications