மழைக்காலக் கூட்டத் தொடரில் தயாநிதி மாறன் விலகக் கோரி நெருக்குவோம்- பாஜக
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில்,
தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிம விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்குச் சாதகமாக அவர் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு முழுமையான ஆதாரங்கள் உள்ளன. தயாநிதி மாறனுக்கு எதிராக ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் வலுவான சாட்சியத்தை அளித்துள்ளார். எனவே தயாநிதி மாறன் உடனடியாக பதவி விலக வேண்டும்.
அவர் விலகாவிட்டால் பிரதமர் தயாநிதி மாறனை நீக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வருகிற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது தீவிரமாக வலியுறுத்தவுள்ளோம். அரசுக்கு நெருக்குதல் கொடுப்போம்.
தயாநிதி மாறன் இதிலிருந்து தப்ப முடியாது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.