நிலக் கொள்ளையர்களை வேட்டையாடும் போலீஸ்-இதுவரை 540 பேர் மீது வழக்கு
சென்னை: தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை வேட்டையாடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக இதுவரை 540 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 200 பேர் சிக்கியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், நில ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட அப்பாவிகளின் நிலங்களை உரியவர்களுக்கே திருப்பித் தருவேன் என்று கூறியிருந்தார்.
தற்போது நில மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன் விளைவாக போலீஸார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு புகார்களை தூசி தட்டி எடுத்து அவற்றை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிதாகவும் பெருமளவில் புகார் வரத் தொடங்கியுள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 540 புகார்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 200 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளனவாம்.
புகாருக்குள்ளாகியுள்ள இந்த 540 பேரில் பெரும்பாலானவர்கள் திமுகவினர் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்காலத்தில்தான் வரலாறு காணாத வகையில் நில ஆக்கிரமிப்புகளும், அபகரிப்புகளும் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நில ஆக்கிரமிப்பு புகார்கள் குறித்து கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கூறுகையில் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தை பிரயோகிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சென்னையிலும் நில அபகரிப்பாளர்கள் மீது நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இங்கு 200க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் நடவடிக்கையே எடுக்காமல் தூங்கிக் கிடந்தன இந்த கோப்புகள். தற்போது இவற்றை தூசி தட்டி எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் போலீஸார்.
நேற்று பட்டாளத்தை சேர்ந்த 67 வயதான சாந்தகுமாரி என்பவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கவுன்சிலர் ஒருவர் ரூ.80 லட்சம் மதிப்புள்ள தனது வீட்டை அபகரித்துக்கொண்டதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக புளியந்தோப்பு உதவி கமிஷனரை விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல பெரம்பூரில் ரெயில்வேக்கு சொந்தமான 10 கிரவுண்டு நிலத்தை கவுன்சிலர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோலவரும் புகார்களை உடனடியாக விசாரித்து தவறு செய்தவர்களை அதிரடியாக கைது செய்து வழக்குத் தொடருமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் நில அபகரிப்பு செய்தோர் பெரும் கிலிக்குள்ளாகியுள்ளனர். அதேசமயம், நிலத்தைப் பறி கொடுத்தவர்கள் காவல்துறையை தேடி நிவாரணம் நாடி வரத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications