'மாறன் எஃபெக்ட்!' - சன் டிவி பங்குகள் கிடுகிடு வீழ்ச்சி!
மும்பை: மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சன்டிவியின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தயாநிதி மாறன் அவரது சகோதரர் நிறுவனத்தின் நலன் கருதி ஏர்செல் நிறுவனத்தின் உரிமத்தை முடக்கி வைத்தார் என்று தயாநிதி மாறனின் முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட ஏர்செல் சிவசங்கரன், எனது நிறுவனத்தை விற்க தயாநிதி மாறன்தான் நிர்ப்பந்தம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தயாநிதிமாறன் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் தயாநிதிமாறன் பிரதமரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்.
ராஜினாமாவையடுத்து மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன்டிவியின் பங்குகளின் விலையில் 8 சதவீதம் சரிவு ஏற்பட்டது. அவர்களுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலைகளில் 3 சதவீதம் சரிவு காணப்பட்டது.
ஏற்கெனவே சன் குழுமத்தின் மிக முக்கிய நிர்வாகியான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கைதாகி பல்வேறு வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அடுத்து தயாநிதி மாறன் கைதாவார் என எதிர்ப்பார்க்கப்படுவதால், சன் குழும பங்குகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications