ரீசார்ஜ் வியாபாரிகள் போராட்டத்துக்கு வணிகர் பேரவை ஆதரவு
சென்னை: செல்போன் ரீசார்ஜுக்கு தரப்படும் கமிஷன் குறைக்கப்பட்டதற்கு எதிராக ரீசார்ஜ் வியாபாரிகள் நடத்தும் போராட்டத்துக்கு வணிகர் பேரவை ஆதரவு அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
செல்போன் மற்றும் ரீசார்ஜ் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்ற வணிகர்களுக்கு தொடர்ந்து கமிஷன் தொகையை குறைத்து வந்துள்ளன. 2002-ல் ரீசார்ஜ் வணிகர்களுக்கு 7 சதவிகிதம் கொடுத்து வந்த நிறுவனங்கள் படிப்படியாக குறைத்து தற்போது 3.80 சதவிகிதம் வழங்கி வருகின்றன.
கடை வாடகை, மின் கட்டணம், சம்பளம் அனைத் தும் உயர்ந்து விட்ட நிலையில் கமிஷன் குறைப்பால் ரீசார்ஜ் ரீடெயில் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விளம்பரத்திற்காக கோடிக் கணக்கில் செலவிடும் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு குறைந்த லாபம் வழங்கி தங்களது லாபத்தை அதிகப்படுத்தி வருவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ரீசார்ஜ் நிறுவனங்கள் அலட்சியப்படுத்துகின்றன.
இன்றைய காலகட்டத்தில் சில்லரை வணிகத்தில் பல்வேறு பிரிவு வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் தற்போது செல்போன் மற்றும் ரீசார்ஜ் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அகற்ற வேண்டியது பேரமைப்பின் கடமை என்ற அடிப்படையில் செல்போன் ரீசார்ஜ் விற்ப னையாளர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழுமையான ஆதரவைத் தரும்! எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரச்சினைகளை மேலும் வளர்க்காமல் தீர்வு காண முன் வர வேண்டும் என்று பேரமைப்பு கேட்டுக் கொள்கின்றது.
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications