மத்தியிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: அத்வானி தாக்கு
கொல்கத்தா: மக்களின் வரிப்பணத்தை வைத்து செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோரின் பெயரையே மாற்றி மாற்றி சூட்டி ஒரு குடும்பத்தின் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடுவது நியாயமா என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்தியிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனசங்கம் கட்சி நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 110-வது பிறந்த நாளையொட்டி கொல்கத்தாவில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது,
இந்த நாடு சுதந்திரம் அடைவதற்காக எத்தனையோ தலைவர்கள் தங்கள் சுகங்களை, உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அப்படியிருக்க மத்திய அரசோ எந்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் உடனே அதற்கு ஒரேயொரு குடும்ப உறுப்பினர்களின் பெயரை மட்டும் சூட்டி கோடிக்கணக்கில் செலவிட்டு விளம்பரம் செய்வது சரிதானா? அவ்வாறு செய்தால் ஜனநாயகம் வலுவடையுமா, குடும்ப ஆட்சி நிலைபெறுமா?
பாபா சாஹோப் அம்பேத்காருடன் சேர்ந்து இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். அவரது பிறந்தநாளான ஜூலை 6-ம் தேதியன்று அவருடைய தியாகங்களை நினைவு கூர்ந்து வானொலியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாவது ஒலிபரப்பானதா?
மத்திய அரசின் 5 திட்டங்களுக்கு நேரு குடும்பத்தார் பெயர் சூட்டும் நிகழ்ச்சி சில காலத்திற்கு முன் நடந்தது. அப்போது நான் பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் வைத்து நேரடியாக கேட்டேன்,
இந்த புதிய திட்டங்களுக்கு பெயர் சூட்டத் தகுதி வாய்ந்த தலைவர்கள் வேறு யாருமே இல்லையா? ஏன் உங்களை நிதியமைச்சராக்கிய பிரதமர் நரசிம்ம ராவின் பெயரை ஏதாவது ஒரு திட்டத்திற்காவது சூட்டலாமே? என்றேன். பிரதமர் மறுமொழி பேசவேயில்லை.
1953-ம் ஆண்டு ஜம்ம-காஷ்மீர் மாநிலத்திற்கென்று தனிக் கொடி ஏற்பட்டது. ஆனால் அதை அங்கு ஏற்ற முடியாத நிலை இருந்தபோது தேசியக் கொடியை ஏற்றும் கிளர்ச்சிக்கு முகர்ஜி தான் தலைமை தாங்கினார். அதில் பலர் இறந்தனர்.
தற்போது காஷ்மீரில் உள்ள சில தலைவர்கள் 1953-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைமை வேண்டும் என்கின்றனர். அப்படியென்றால் ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் தனி குடியரசுத் தலைவர், பிரதமர் நியமிக்கப்படவுள்ளனரா?அப்படியானால் இனி அங்கு தேசியக் கொடிக்கு இடம் இருக்காதா?
உச்ச நீதிமன்றம், மத்திய தேர்தல் ஆணையம், தலைமை கணக்கு தணிக்கையாளர் போன்ற அமைப்புகளுக்கு காஷ்மீர் மீது இனி கட்டுப்பாடு இருக்காதா? அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை பாஜக ஒருபோதும் ஏற்காது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்படும் நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் என்று நம்புகிறேன்.
மேற்கு வங்கத்தில் இடது சாரிகளை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றிவிட்டு புதிய வரலாறு படைத்துள்ள மமதா பானர்ஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாற்றம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் விரைவில் வங்கதேசம் செல்வதை வரவேற்கிறேன். வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுடைய உடைமைகளைப் பாதுகாப்பது, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திரும்ப அழைப்பது குறித்து இவர்கள் இருவரும் வங்கதேசத் தலைவர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications