நள்ளிரவு தாக்குதலுக்கு ப.சிதம்பரமே பொறுப்பு-ராம்தேவ் குற்றச்சாட்டு

கடந்த மாதம் கறுப்புப் பணத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை கோரி ராம்தேவ் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது நள்ளிரவில், அவர்களை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது போலீசார் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராம்தேவ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது இந்த குற்றத்தை சாட்டினார்.
இது தொடர்பாக சிதம்பரத்துக்கு நேரில் நோட்டீஸ் தரப்பட வேண்டு்ம், இது குறித்து சிதம்பரமே நேரடியாக ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட வேண்டாம் என்றார் ஜேத்மலானி.
மேலும் அவர் கூறுகையில், பேரணி ஏதும் நடத்தாமல் அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை நள்ளிரவில் அங்கிருந்து அகற்றும் முடிவு எப்போது எடுக்கப்பட்டது, ஏன் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சிதம்பரத்திடம் கேட்க வேண்டும் என்றார்.
இதை விசாரித்த நீதிபதிகள் செளஹான், சுவந்ததிர் குமார் ஆகியோர், இது குறித்து டெல்லி போலீசாரின் விளக்கத்துக்குப் பின் முடிவெடுப்பதாகக் கூறி விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த விவகாரத்தில் ராம்தேவ் ஆதரவாளர்கள் தந்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் ஏன் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று கேட்ட நீதிபதிகள், இது குறித்து அவர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேவுக்கு உத்தரவிட்டனர்.
ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை அந்த இடத்தில் யோகா தான் நடந்து வந்தது. திடீரென அந்த இடத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டிய அளவுக்கு அங்கு என்ன நடந்துவிட்டது என்பதை டெல்லி அரசு விளக்கிய ஆக வேண்டும். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் அளவுக்கு போலீசார் நடந்து கொண்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
நள்ளிரவு 11.30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் சாதனங்களையும் பயன்படுத்த வேண்டிய அவசியமும், தடியடி நடத்த வேண்டிய அவசியமும் ஏன் வந்தது என்பதை டெல்லி போலீஸ் விளக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications