சன் குழு பொது மேலாளரின் சகோதரர் மிரட்டியதாக போலீஸ் எஸ்.பியிடம் புகார்
நெல்லை: சன் குழும பொது மேலாளர் முருகனின் சகோதரரான பாலு என்கிற பாலசுப்பிரமணியன் தன்னை மிரட்டியதாக நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. விஜயேந்திர பிதாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகார் மனுவில்,
புளியங்குடியில் கோமதி நாயகம் என்பவர் நடந்தி வந்த கேபிள் டிவியை கடந்த 2009ம் ஆண்டு வாங்கி 2 ஆண்டுகளாக தொழில் செய்து வந்தேன். அப்போது சன் டிவி குழுமத்தின் தென்மண்டல பொது மேலாளர் முருகன் என்பவரின் சகோதரர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் மற்றும் கே பாஸ்கர் ஆகிய 2 பேரும் என்னை சந்தித்து மிரட்டினர்.
புளியங்குடியில் இருந்து ராஜபாளையம் வரை சுமார் 40கிமீ தூரத்திற்கு நெடுஞ்சாலையில் அரசு அனுமதி இல்லாமல் கேபிள் லைன் போட்டு லிங்க பெற வேண்டும் என கூறினர். இது தொடர்பாக பொய் புகார் அளித்து மிரட்டி பணிய வைத்தனர். அந்த புகாரால் மனம் உடைந்த நான் வேறு வழியில்லாமல் அவர்கள் கொண்டு வந்த சுபம் கேபிள் விஷன் இணைப்பை பெற்றேன்.
இதன்பின்னர் என்னுடைய கேபிள் தொழிலையே தருமாறு கேட்டனர். நான் கொடுக்க மறுத்ததும் மீண்டும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து அடியாட்களை வைத்து மிரட்டினர். வேறு வழியின்றி கையெழுத்து போட்டு கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் கொடுப்பதாக கூறிய பணத்தையும், தர முடியாது என கூறினர். பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே என்னுடைய கேபிள் டிவியை மீ்ட்டு தர வேண்டுகிறேன். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications