பிரதமருடன் மோதிய முகுல் ராயிடமிருந்து ரயில்வே துறை பறிப்பு
டெல்லி: பிரதமர்தான் ரயில்வே அமைச்சர். விபத்து நடந்த இடத்திற்கு நான் போக முடியாது என்று திமிராகப் பேசிய ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராயிடமிருந்து அத்துறை பறிக்கப்பட்டு கப்பல்துறையை கொடுத்துள்ளார் பிரதமர்.
திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்தவர் முகுல் ராய். இவர் ரயில்வே இணை அமைச்சராக இருக்கிறார். மமதா பானர்ஜி வசம் இருந்த ரயில்வே துறை தற்போது பிரதமரின் பொறுப்பில் உள்ளது. இந்த நிலையில் உ.பியில் நடந்த கோர ரயில் விபத்து மற்றும் அஸ்ஸாமில் நடந்த ரயில் மீதான குண்டு வீச்சு மற்றும் தடம் புரண்ட சம்பவங்களில் முகுல் ராய் உள்பட எந்த ரயில்வே இணை அமைச்சரும் உடனடியாகப் போகவில்லை. மொத்தம் 3 ரயில்வே இணை அமைச்சர்கள் இருந்தும் யாருமே போகாமல் இருந்தது எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை ஆளுங்கட்சிக்கு சம்பாதித்துக் கொடுத்தது.
இதையடுத்து இணை அமைச்சர் முனியப்பா உ.பி. விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் இருந்த முகுல் ராயை, அஸ்ஸாம் விபத்து இடத்திற்குப் போய்ப் பார்க்குமாறு பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் முகுல் ராயோ அதை நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் இப்போது அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை. அங்கு எல்லாவற்றையும் சரி செய்து விட்டார்கள் ரயில் பாதையும் சரியாகி விட்டது. இனிமேல் எதற்கு நான் போக வேண்டும். பிரதமர்தான் ரயில்வே அமைச்சர், நான் இணை அமைச்சர் மட்டுமே. தற்போது நான் போக வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டார்.
முகுல் ராயின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தை கடும் ஆத்திரத்துக்குள்ளாக்கியது. இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதால் அமைதியாகி விட்டனர்.
இந்த நிலையில் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் முகுல் ராய்க்கு ஆப்பு வைத்து விட்டார் பிரதமர். அவரிடமிருந்து ரயில்வே துறையைப் பறித்த அவர் கப்பல்துறையை கொடுத்துள்ளார். மேலும் ரயில்வே அமைச்சர் பொறுப்புக்கும் முகுல் ராயை பிரதமர் பரிசீலிக்கவில்லை. மாறாக திணேஷ் திரிவேதிக்கு அப்பதவி போய் விட்டது.
தனது துடுக்கு வாயால் இப்போது நல்ல பதவியை இழந்து நிற்கிறார் முகுல் ராய்.












Click it and Unblock the Notifications