மும்பை மற்றும் நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்-ப.சிதம்பரம்
டெல்லி: மும்பையில் நடந்தது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல். இந்த சம்பவத்தால் மும்பை மற்றும் நாட்டு மக்கள் உணர்ச்சிவசப்படாமல் மிகுந்த பொறுமையும், அமைதியும் காக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில்,
மும்பையில் நடந்த 3 குண்டு வெடிப்புகளில் 10 பேர் பலியாகியுள்ளனர். 54 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கையும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர வாய்ப்புள்ளது.
மும்பையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்காக வந்துள்ள என்ஐஏ புலனாய்வுப் படையினர், மும்பை போலீஸாருடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்னொரு குழுவும் விரைகிறது.
மும்பையில் உள்ள கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ஹைதராபாத்தில் இருந்து இரு மத்திய தடயவியல் குழுக்கள் சிறப்பு விமானங்களில் மும்பை விரைந்துள்ளன.
நிலைமையை மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் கண்காணித்து வருகிறார். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை உள்துறையிலிருந்து மும்பை நிலைமை குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications