மும்பை குண்டுவெடிப்பில் பாக். தொடர்பு குறித்து தீவிரமாக விசாரிக்க பாஜக கோரிக்கை
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளத பாஜக, இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரித்து கண்டறிய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. மிகவும் கோழைத்தனமான தாக்குதல் இது. வேண்டும் என்றே மும்பையை தொடர்ந்து குறி வைத்து இந்திய தேச விரோதிகள் தாக்கி வருகின்றனர்.
தீவிரவாதம் மூலம் இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர் இன்னும் முடியாமல் தொடர்கிறது என்பதை இந்தத் தாக்குதல் நிரூபித்துள்ளது. இந்த தீவிரவாதத்தை முழுமையாக நசுக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருக்கிறதா என்பது முழுமையாக, தீவிரமாக கண்டறியப்பட வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம். இதுபோன்ற தாக்குதல்களை முழுமையாகத் தடுக்கும் வகையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை அதன் உச்சந்தலையிலேயே நசுக்க வேண்டும். வெறுமனே உஷார் நிலையை அறிவித்தால் மட்டும் போதாது.
2008 தாக்குதலுக்குப் பின்னர் மும்பையில் மிக பலத்த கண்காணிப்பும், பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. தீவிரவாதத்தை வேரோடு ஒழிக்க உறுதியான அரசியல் தைரியமும், கடுமையான நடவடிக்கையும் தேவை என்பதையே இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் காட்டுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications