முல்லைப் பெரியாறு விவகாரம்: விரைவில் சமரசப் பேச்சு- மத்திய அரசு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பவன்குமார் பன்சல் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சலுக்கு கூடுதல் பொறுப்பாக மத்திய நீர்வள மேம்பாடுத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்தத் துறையின் முந்தைய அமைச்சரான சல்மான் குர்ஷித்திடம் இருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவர் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்துவேன்.
இதன் பிறகு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரளத்துடன் பேச்சு நடத்துவேன்.
மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க முன் வரும் பட்சத்தில், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications