காங்- திமுக நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார்
ஊட்டி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிதாஸ். அவர் தனக்கு சொந்தமான நிலத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமாரிடம் அந்தோணிதாஸ் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
அந்தோணிதாஸ் ஆகிய நான், எனது மனைவி அல்போன்சாவுடன் சேரங்கோட்டில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் தேயிலை விவசாயம் செய்து வருகிறோம்.
எனது மகள் ரோஸ்லீன் என்பவருக்கு 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தோம். அவர் கணவருடன் வாழாமல் எங்கள் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் எனக்கும், எனது மகளுக்கும் இடையே நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
தற்போது இந்த நிலம் தொடர்பாக சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் மற்றும் அந்தோணி ஆகியோர் எனக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பட்டா நிலத்தை அவர்களுகுக ரூ. 30 லட்சத்திற்கு கொடுக்குமாறு மிரட்டுகின்றனர்.
நிலத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று எனது மகள் மூலமாகவும், நேரடியாகவும், அப் பகுதியைச் சேர்ந்த காவல் நிலைய ஆய்வாளர் தண்டபாணியுடன் சேர்ந்து மிரட்டுகின்றனர்.
எனவே, எனது நிலத்தை மோசடி செய்ய நினைக்கும் ஆய்வாளர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர், திமுக நகராட்சி தலைவர் ஆகியோரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும், அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீது வி்சாரணை நடத்தி உண்மை நிலையை அறிய எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் உண்மையாகும் பட்சத்தில் திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது நில அபகரிப்பு மோசடி வழக்கு பாய வாய்ப்பு உள்ளது.
இதுவரை நில அபகரிப்பு புகாரில் திமுகவினர் மீது மட்டுமே புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications