லஷ்கரின் 'கராச்சி புராஜெக்ட்'-பாக். வழிகாட்டுதலில் நாச வேலையில் ஈடுபடும் ஐஎம்!
டெல்லி: லஷ்கர் இ தொய்பாவின் கராச்சி புராஜெக்ட் என பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைபப்பு. யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த இத்தகவலை வெளியுலகுக்குச் சொன்னது அமெரிக்க பாகிஸ்தானிய தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லிதான்.
இந்தியன் முஜாஹிதீனை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கி நடை போடச் செய்து வருவது லஷ்கர் இ தொய்பா. கராச்சி திட்டம் என்ற பெயரில் இந்தியன் முஜாஹிதீனை செயல்படுத்தி வருகிறது லஷ்கர்.
இந்த தீவிரவாத அமைப்பில் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். இந்தியாவைச் சேர்ந்தவர்களையே இந்த அமைப்பில் சேர்த்து, பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி அளித்து தீவிரவாத செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள்.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை அளிப்பது பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினர்கள்தான். அவர்கள்தான் ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டுகளைத் தயாரிப்பது உள்ளிட்டவற்றை இவர்களுக்குக் கற்றுக் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி நாச வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள்.
அமெரிக்காவின் எப்பிஐ விசாரணையின் இந்த விரிவான திட்டத்தை அம்பலப்படுத்தினான் ஹெட்லி. அதுவரை ஹூஜி அமைப்பு மீதுதான் இந்திய அதிகாரிகள் சந்தேகப்பட்டு வந்தனர்.
ஹூஜி அமைப்பைத்தான் லஷ்கர் தனது நாச வேலைகளுக்கு இந்தியாவில் பயன்படுத்துவதாக இந்தியா கருதி வந்தது.
காரணம், ஹூஜி அமைப்பைத்தான் ஆரம்பத்தில் தனது சதி வேலைகளுக்கு லஷ்கர் பயன்படுத்தி வந்தது. ஹூஜி அமைப்பின் தலைவரான இலியாஸ் காஷ்மீரிக்கு நெருக்கமானவன் ஹெட்லி. இலியாஸ் காஷ்மீரி மூலம்தான் கராச்சி திட்டம் குறித்து ஹெட்லிக்குத் தெரிய வந்ததாம்.
இந்தியன் முஜாஹிதீனின் தலைவர்களான ரியாஸ் மற்றும் இக்பால் பத்கல் ஆகிய இருவரும் லஷ்கர் அமைப்பின் பாதுகாப்புடன், கராச்சியில் வசித்து வருவதாகவும் ஹெட்லி கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
லஷ்கர் அமைப்பு, இந்தியன் முஜாஹிதீன் மூலம் தனது தாக்குதலை இந்தியாவில் நடத்துவற்கு முக்கியக் காரணம் உள்ளது. இந்த அமைப்பில் இந்தியர்கள்தான் உள்ளனர். இந்தியர்களையே முழுக்க முழுக்க தாக்குதல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், பாகிஸ்தானுக்கும், தனக்கும் நேரடியாக எந்த சிக்கலும் வராது என்பது லஷ்கரின் திட்டம். இதனால்தான் இந்தியர்களை வைத்தே இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட இந்தத் திட்டத்தை அது செயல்படுத்தி வருவதாக உளவுத்துறையினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications