லவுட் ஸ்பீக்கர் மூலம் மக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
மதுரை: மதுரையில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் கூறியதாவது,
ஒலிபெருக்கியால் ஏற்படும் ஒலி மாசு காது நரம்புகள், மூளைதிறன், மனநிலையை பாதிக்கின்றது. மேலும், தலைவலியோடு ரத்த கொதிப்பையும் ஏற்படுத்தும். இதனால் நோயாளிகள் மற்றும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைகின்றனர்.
ஒலிபெருக்கி அமைப்பவர்கள் காவல்துறையின் அனுமதி பெற்ற பின்பே அமைக்க வேண்டும். அனுமதி பெற்று இருப்பினும் குறிப்பிட்ட மேல் ஒலி எழுப்பக் கூடாது.
குறிப்பாக, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், இறைவழிபாட்டு தலங்களுக்கு அருகில் ஒலி பெருக்கி வைக்கக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் எந்த இடத்திலும் ஒலிபெருக்கி வைக்கக் கூடாது.
மேலும், ஒரு இடத்தில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் ஒலிபெருக்கி உபயோகிக்கக் கூடாது.
வாகனங்கள் காற்று ஒலிப்பான்கள் பொருத்தக் கூடாது. நகர்புறங்களில் காற்றொலிப்பான்களை உபயோகிக்க கூடாது.
இந்த விதிமுறைகளை மீறி ஒலி மாசு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
மதுரையில் காது குத்து, வளைகாப்பு, சடங்கு, கல்யாணம் என எந்த விழாவாக இருந்தாலும் அமர்க்களப்படும். கூடவே ஒலிபெருக்கிகளும் காதுகளைக் கிழிக்கும். அதற்கு சகாயம் தற்போது எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications