மும்பை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

15 நிமிடங்களில் 3 குண்டுவெடிப்புகள்
மும்பையில் நேற்று மாலை 6.45 மணியிலிருந்து 7 மணி வரை கால் மணி நேரத்திற்குள் ஜவேரி பஜார், ஓபரா ஹவுஸ், தாதர் மேற்கு ஆகிய இடங்களில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து மும்பையை அதிர வைத்தன.
இந்த கோர சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இணைந்து இதை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மும்பையில் தற்போது என்ஐஏ குழுக்கள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளன. என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்தும், ஹைதராபாத்திலிருந்தும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினர் மும்பை வந்துள்ளனர்.
நேற்று இரவு மும்பையில் கன மழை பெய்ததால் பல முக்கியத் தடயங்கள் அழிந்திருக்கலாம் என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இருப்பினும் குண்டுவெடித்த இடங்களை முடிந்தவரை பாதுகாப்புடன் வைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, தாதர் மற்றும் ஓபரா ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் சில உருப்படியான தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications