ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: 3 தீவிரவாதிகள், 1 ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை
குப்வாரா: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே காலையில் இருந்து நடந்து வரும் துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகளும், 1 ராணுவ அதிகாரியும் கொல்லபப்ட்டனர். மேலும், 5 ராணுவத்தினர் காயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டம் லோலப் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளை சரண் அடையுமாறு கூறியதற்கு அவர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுடத் துவங்கினர். தீவிரவாதிகள் ஒரு பெண்ணை பிணையக்கைதியாக பிடித்தனர். பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை போராடி மீட்டனர். அந்த வீட்டில் இருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் உள்ள மைதான்பூரில் ஒரு வீட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மூண்டுள்ளது. அந்த வீட்டிற்குள் 1 முதல் 2 தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன. காலை முதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் துப்பாக்கிச் சூட்டில் 1 ராணுவ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார், 5 அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications