பார் அனுமதி இல்லை-நெல்லையில் 64 டாஸ்மாக் கடைகளுக்கு சிக்கல்
நெல்லை: பார் ஏலம் தராத காரணத்தினால் டாஸ்மாக் கட்டிடங்களை உரிமையாளர்கள் காலி செய்ய கெடு விதித்ததால் 64 மதுக்கடைகளுக்கு அதிகாரிகள் புதிய இடம் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 7 ஆயிரம் மதுக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
டாஸ்மாக் மது கடை அருகே பார் நடத்துவதற்கு உரிமம் தனியார்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பார்களில் குடிகாரர்களுக்கு திண்பண்டங்கள், தம்பளர், தண்ணீர் பாக்கெட், குளிர்பானம், சிகரெட் ஆகியவை விற்கப்படுகின்றன. காலி பாட்டில்களையும் பார் உரிமையாளர்கள் சேகரித்து கொள்வர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 223 டாஸ்மாக் மதுகடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 49 கடைகள் நெல்லை மாநகரத்திலும், 174 கடைகள் நெல்லை மாவட்டத்திலும் உள்ளன.
இந்த கடைகளில் ஜூலை 1 முதல் ஜூன் 30 தேதி வரை பார் நடத்துவதற்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. நிர்ணயி்க்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்காமல் கடைசி நாளுக்கு முந்திய நாள் இரவோடு இரவாக விண்ணப்பங்களை வழங்கி ஆளுங்கட்சியினருக்கு மட்டும் உரிமம் வழங்குவதாக புகார் எழுந்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பாதிக்கும் மேற்பட்ட பார்களை டாஸ்மாக் கடை இருக்கும் கட்டிட உரிமையாளர்களே நடத்தி வந்தனர். அவர்கள் மீண்டும் பார் எடுக்கும் ஆசையில் விண்ணப்பம் பெற வந்தனர். ஆனால் பில்டிங் உரிமையாளர்கள் யாருக்கும் பார் விண்ணப்பம் கூட கிடைக்கவில்லை.
பார் கிடைக்காத பில்டிங் உரிமையாளர்கள் பலர் தற்போது போர்கொடி தூக்கியுள்ளனர். தங்களுக்கு பார் ஏலம் தராத நிலையில் மதுக்கடைகளை காலி செய்யுமாறு கெடு விதித்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் 64 மதுக்கடைகளுக்கு புதிய இடம் தேடும் சூழ்நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த 64 மதுக்கடைகளையும் இடம் மாற்றுவதற்கு மதுரை மண்டல முதுநிலை மேலாளர் ராகவன், நெல்லையில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டுள்ளார். இவருடன் நெல்லை மாவட்ட மேலாளர் சண்முகம், மற்றும் அதிகாரிகள் புதிய கடைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து மதுக்கடைகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், தேவலாயங்கள், மசூதிகள், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மக் கடைகளை அமைக்க கூடாது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் சரியான இடத்தை தேர்ந்தெடுப்பதில் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications