2008 மும்பை தாக்குதல் சதிகாரன் இலியாஸ் காஷ்மீரி இறக்கவில்லை; உயிருடன் உள்ளதாக தகவல்
இஸ்லாமாபாத்: கடந்த மாதம் பாகிஸ்தானில் அமெரி்க்க விமானத் தாக்குதலில் உயிர் இழந்ததாகக் கூறப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி உயிருடன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அல்-கொய்தாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி தீவிரவாத அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்டது இலியாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்குப் பேர் போன சுயாட்சி கொண்ட வட-மேற்கு எல்லைப் புற மாகாணமான வசீர்ஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 3-ம் தேதி அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீரி உயிருடன் இருப்பதாகவும், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் காஷ்மீரி இறந்துவிட்டான் என்பதை உறுதிபடுத்தத் தவறிவிட்டனர் என்று கூறப்படுகின்றது.
காஷ்மீரி இறந்து கிடப்பது போன்ற புகைப்படத்தை ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் இருப்பது நவம்பர் 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்பது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரி கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அன்மையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் செய்யது சலீம் ஷாசாத் காஷ்மீரியை பேட்டி எடுத்ததன் மூலம் அவன் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
பாகிஸ்தானில் அல் கொய்தாவுக்காக செயல்படும் முக்கியத் தலைவர் காஷ்மீரி என்று தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications