ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?

Subscribe to Oneindia Tamil

Air India
டெல்லி: பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடியாக எகிறிவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ரூ.20,415 கோடி கடன் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே, மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளது இந்த நிறுவனம். அரசு இந்த நிறுவனத்தை மீட்டெடுக்குமா அல்லது மூழ்கவிட்டு தனியாருக்கு தாரைவார்க்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. ஊழியர் ஒத்துழைப்பின்மை, வீண் செலவுகள், தேவைக்கும் அதிகமான பணியாளர் சுமை, எரிபொருள் வாங்கிய வகையில் கடன் என பல வகையிலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எரிபொருள் கட்டணம் என்ற பெயரில் எக்கச்சக்க பாக்கி வைத்திருப்பதால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் எரிபொருள் வழங்குவதை நிறுத்தின. இதனால், பல்வேறு வழித் தடங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பல்வேறு வகைகளிலும் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடி கடன் இருப்பது தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.20 ஆயிரத்து 415 கோடி அளவிலான கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஏர் இந்தியா உள்ளது. அந்தத் தொகையை கட்டத் தவறினால், வங்கிகளின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்.

சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2007-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2011-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.20 ஆயிரத்து 320 கோடி அளவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளது. இது தவிர, ரூ.46 ஆயிரத்து 950 கோடி கடன் சுமை உள்ளது. விமானங்கள் வாங்க பெற்ற கடன், முதலீட்டு கடன், கடன் பாக்கிக்கான தவணை கடந்த வட்டி ஆகிய இனங்களின் கீழ் இந்த கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது.

நஷ்டமும், கடன் சுமையும் கழுத்தை இறுக்குவதால் மத்திய அரசின் உதவியை ஏர் இந்தியா நிறுவனம் நாடி உள்ளது. பங்குகள் மூலமாக ரூ.6 ஆயிரத்து 600 கோடி, ரொக்கப் பற்றாக்குறை நிதியாக ரூ.5 ஆயிரத்து 736 கோடி ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று முடிவு

இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு கூடுதல் கடன் இல்லா பங்குத் தொகை வழங்க தீர்மானிக்கப்படும் என தெரிகிறது.

இது தவிர, ஏர் இந்தியா நிறுவனத்தின் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான பிற நடவடிக்கைகள் குறித்தும் மந்திரிகள் குழு கூட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, சிறப்பு விமானங்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்காக இயக்கப்பட்ட விமானங்கள் என்ற வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகையாக ரூ.1222 கோடி நிலுவையில் உள்ளது. அதை அரசிடம் வசூலிக்கும் முயற்சியும் நடக்கிறது.

இன்னொரு பக்கம், சாதாரண தனியார் விமான நிறுவனங்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றன. ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் போன்றவை நல்ல லாபத்துடன் இயங்கும் நிலையில், அரசின் உதவி, அதிக விமானங்கள் என சகல வசதிகளையும் வைத்துக் கொண்டு நஷ்டத்தில் இயங்குகிறதே ஏர் இந்தியா, என ஆதங்கக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+