அழகிரியின் கூட்டாளி 'அட்டாக்' பாண்டி மீது இன்னொரு வீடு அபகரிப்பு வழக்கு
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளியான அட்டாக் பாண்டி மீது இன்னொரு வழக்குப் பாய்ந்துள்ளது.
அழகிரியின் கூட்டாளிகள் மீது சரமாரியாக நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் பாயத் தொடங்கியுள்ளன. இவர்களால் பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் கொடுத்து வருகின்றனர். இவற்றை விசாரித்து வரும் போலீஸார் ஒவ்வொரு வழக்காகப் பதிவு செய்து வருகின்றனர்.
அழகிரி படையின் முக்கிய தளகர்த்தர்களான அட்டாக் பாண்டி, கோ.தளபதி, எஸ்.ஆர்.கோபி ஆகியோர் மீது இதுவரை பெருமளவில் புகார்கள் வந்துள்ளன. இவர்களில் முதல் ஆளாக அட்டாக் பாண்டியை போலீஸார் தூக்கியுள்ளனர். திருமலை நாயக்கர் மஹால் அருகே ஒரு வீட்டைமுறைகேடாக ஆக்கிரமித்து காலி செய்யாமல் அந்த வீட்டையே அபகரித்ததாக அட்டாக் பாண்டி, அவரது தம்பி மாரிமுத்து, உறவினர் திருச்செல்வம் உள்ளிட்டோரைப் போலீஸார் கைது செய்து உள்ளே போட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு வழக்கிலும் அட்டாக் பாண்டியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை தெற்கு வெளி வீதியைச்சேர்ந்த பிருத்விராஜ் என்ற எல்ஐசி வளர்ச்சி அதிகாரிக்கு அவனியாபுரத்தில் ஒரு வீடு உள்ளது. 2006ம் ஆண்டு இந்த வீட்டுக்கு 2 ஆண்டு குத்தகை என்ற பெயரில் குடியேறினார் பாண்டி. ஆனால் ஒரு ஆண்டுக்கு மட்டும் வாடகை கொடுத்த அவர் அதன் பின்னர் தரவில்லை. இதையடுத்து ஒரு ஆண்டுக்குரிய வாடகையை அட்வான்ஸ் தொகையில் கழித்த பிருத்விராஜ், இடத்தைக் காலி செய்யுமாறு கூறினார். ஆனால் பாண்டியோ காலிசெய்யவில்லை. மாறாக, நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை என் பெயருக்கு எழுதிக்கொடுத்து விடு என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் அவனியாபுரம் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸில் பிருத்விராஜ் புகார் செய்த தகவல் அட்டாக் பாண்டிக்கு உடனடியாக போய் விட்டது. இதையடுத்து தனது அடியாட்களுடன் போய் பிருத்விராஜை மிரட்டியுள்ளார் பாண்டி. அப்போது தட்டிக் கேட்ட பிருத்விராஜின் மனைவியை பெண் என்றும் பார்க்காமல் அடித்துள்ளனர் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் தைரியம் அடைந்த பிருத்விராஜ் நடந்த சம்பவத்தை விளக்கி மீண்டும் புகார் கொடுத்தார். அதன் பேரில் தற்போது அட்டாக் பாண்டி மீது இந்த வழக்கையும் பதிவு செய்து அதிலும் கைது செய்துள்ளனர் போலீஸார்.
மேலும் அவரது கூட்டாளிகளான கண்ணன், ஜெயபாண்டி,சதீஷ்குமார், ஜோதிவேலன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications