ஹில்லாரியிடம் ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசுமாறு ஜெ.வுக்கு அமெரிக்கா நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Hillary Clinton and jayalalitha
சென்னை: அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் தமிழகம் வருகையில் ஈழத் தமிழர் விவகாரம் குறி்த்து பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரி, அமெரிக்கா நாம் தமிழர் இயக்கம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நாம் தமிழர்-அமெரிக்கா அமைப்பு அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலாளார் ஹில்லாரி கிளிண்டன் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,

போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பின் வணக்கங்கள்.

பெருவாரியான மக்கள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக வீற்றிருக்கும் தங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக தமிழக சட்டமன்றத்தில் இலங்கை சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், அவ்வரசாங்கதின் மேல் பொருளாதார தடை கொண்டுவர வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக்கொண்டும் நீங்கள் கொணர்ந்த தீர்மானம் உலகத்தமிழர்கள் மனதில் மிகப் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றது.

தீர்மானம் மட்டுமல்லாது அதற்கு பின்னர் இந்திய பிரதமரை சந்தித்து ராஜபக்சே உள்ளிட்ட போற்குற்றவாளிகள் தண்டனை பெற இந்தியா உதவ வேண்டும் என்று நீங்கள் மீண்டும் வலியுறுத்தியது, அதிலும் நீங்கள் பிரதமருக்கு வழங்கிய கோரிக்கை மனுவில் இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்களுக்கு நடந்தது "இனப்படுகொலை" தான் என்று குருப்பிட்டிருந்த்தது ஆகியவை உலகத்தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலை தந்துள்ளது.

தமிழர் உரிமை மீட்ப்பின் ஒரு பகுதியாக கச்சத்தீவை திரும்பப்பெறும் முயற்சியில் நீங்கள் தொடுத்த வழக்கில் மிக சாதுர்த்தியமாக சட்டமன்றத்தில் தீர்மானமாக முன்மொழிந்து தமிழ்நாடு வருவாய் துறையையும் ஒரு பிரதியாக சேர்த்த பாங்கு உங்கள் திறமையை பறைசாற்றுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானங்களைக் கொணர்ந்த தங்களுக்கு நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக கோடான கோடி நன்றிகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று, தமிழர்களின் குரலாக, தமிழர்களின் முதல்வராக அரியணையில் வீற்றிருக்கும் தங்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கின்றது.

அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலாளர் திருமதி. ஹில்லாரி கிளிண்டன் அவர்கள் வரும் ஜூலை 19 மற்றும் 20-ம் தேதிகளில் இந்தியாவில் அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அவருடைய பயணத் திட்டத்தில், தமிழகதிற்கு வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அவ்வாறு அவர் வருகை தரும் வேளையில் தங்களுக்கு ஒரு முக்கிய விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

நீங்கள் ஏற்கனவே பல தடவை குறிப்பிட்டதை போலவே இலங்கையில் நாளுக்கு நாள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஜூலை 15 -ம் தேதி அன்று சிங்கள அரசாங்கம் இலங்கை ராணுவ தலைமையகத்தில் இருக்கும் ஒரு பகுதியை China Aviation Technology Import-Export Corporation (CATIC) என்ற சீனா விமான தளவாடம் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

ராணுவ தலைமையகத்தின் ஒரு பகுதியை கூட விற்கும் அளவில் சீனாவோடு நெருக்கம் பாராட்டுகிறது இலங்கை அரசாங்கம். அது மட்டுமல்லாது இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையில் மட்டும் 759.8 மில்லியன் அமெரிக்கடாலர்களை சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்பதை விட பூலோக ரீதியாக தமிழகதிற்கு தான் முதலில் மிகப்பெரும் அச்சுறுத்தல் என்பது நீங்கள் அறியாததல்ல.

அமெரிக்காவும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக கவலை கொண்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க காங்கிரசில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி (CRS Report - SriLanka:Background and U.S. Relations) அறிக்கையில் சீனாவின் கடற்படை மூலோபாயமான "முத்துமாலை" நடவடிக்கையின் ஒருபகுதியாக தான் சீனா இலங்கையில் முதலீடு செய்கிறது என்று எச்சரித்துள்ளார்கள்.

இச்சூழ்நிலையில் தமிழகம் வரும் அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலர் திருமதி. ஹில்லாரி கிளிண்டன் அவர்களிடம், தமிழகத்தின் நலன் காக்க, தமிழர்களின் நலன் காக்க சீனா ஆதிக்கம் பற்றியும், ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இலங்கை இனவெறி அரசை தண்டிக்கும் முகமாக போர்குற்ற விசாரணையை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள அமெரிக்க அரசாங்கம் ஆவண செய்வது பற்றியும், அனைத்துலக தமிழர்கள் விரும்பும் நியாயமான தீர்வான தனி தமிழீழத்திற்கான ஐ.நா. பொதுசன வாக்கெடுப்பு நடத்தி தென் சூடானை போன்று சுதந்திரம் பெற்ற தேசத்தில் தமிழர்கள் வாழ்வதற்கு வழி ஏற்ப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உலகத்த்தமிழர்களின் குரலாக இருந்து தமிழர் நலன் சார்ந்து நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிக்கும் உற்றதுணையாக நின்று நாங்கள் களமாடுவோம் என்று இந்நேரத்தில் உறுதி கூறி வணக்கங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சீமான் கோரிக்கை

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் நாளை சென்னைக்கு வரவுள்ளார் என்றும் அப்போது அவர் தமிழக முதல்வரைச் சந்திப்பார் என்றும் செய்தி வந்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்கான பயண விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஹில்லாரி கிளிண்டனின் வருகையும், தமிழக முதல்வருடனான அவருடைய சந்திப்பும் ஈழத் தமிழினத்தின் துயரை நேரடியாக நன்கு எடுத்துரைக்கூடிய ஒரு வாய்ப்பாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது.

ஈழத்தில் நடந்த போரில் சிறிலங்கா அரச படைகள் நிகழ்த்திய திட்டமிட்ட தமிழினப் படுகொலையை உலகின் பார்வைக்கு கொண்டு வர வேண்டுமெனில், ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரைத்ததற்கு இணங்க, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதற்கு அமெரிக்க அரசு முன்னின்று முயற்சியெடுக்க வேண்டும் என்பது உலகளாவிய தமிழினத்தின் விருப்பமாகும். பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற தமிழினத்தின் விருப்பம்தான் தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வரால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாகும்.

ஐ.நா.நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி, சுதந்திரமான எந்த விசாரணைக்கும் சிங்கள அரசு இதுவரை ஒப்புக்கொள்ளாத நிலையில், அங்கு நடந்த தமிழினப் படுகொலை குறித்து விசாரிக்க பன்னாட்டு குழுவை நியமிப்பதன் அவசியத்தை ஹில்லாரி கிளிண்டனிடம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையின் ஒப்புதல் வேண்டும்.

பாதுகாப்புப் பேரவையில் ஈழத் தமிழர் படுகொலை பற்றி விவாதிக்க முற்பட்ட போதெல்லாம் அதனை சீனாவும், இரஷ்யாவும் தங்களுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்த வந்துள்ளன. ஆகவே, பாதுகாப்புப் பேரவையி்ன் மற்ற நிரந்தர உறுப்பினர்களான இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றின் துணையுடன் இதற்கான முயற்சியை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழினத்தின் விருப்பமாகும். அதனை ஹில்லாரி கிளிண்டனிடம் தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஈழத்தில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும், அங்கே தமிழர்களின் வாழ்வு பெரும் அவலத்தில் உள்ளது. தமிழர்கள் வாழ்ந்து இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நடந்த வருகிறது; தமிழரின் நகரப் பகுதிகள் சிறிலங்க இராணுவப் பகுதிகளாக (கண்டோண்மெண்ட்) மாற்றப்படுகின்றன; தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன;

தமிழீழத்தின் கடலோரப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மீன் பிடி உரிமை வழங்கப்படுகிறது. இந்த உண்மைகள் யாவற்றையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகிய எம்.ஏ.சுமந்திரன் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, உழைக்க காணியின்றியும், உணவிற்கு வழியின்றியும், வாழ்ந்திட வீடின்றியும் ஈழத் தமிழினம் அவலத்தில் உள்ளது. வாழ வழியற்ற நிலையில் அபாயகரமான கண்ணி வெடி அகற்றல் பணிகளில் தமிழ்ப் பெண்களில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அவலத்தை போக்க வேண்டுமெனில், பன்னாட்டுத் தலையீடு அவசியம், அதனை அமெரிக்காவே முன்னின்று செய்ய வேண்டும். ஏனெனில் மீள் குடியமர்த்தப்படும் தமிழர்களுக்கு உணவளிக்கத் தேவையான நிதியை அமெரிக்காதான் ஒரளவிற்காவது வழங்கி வருகிறது. நிதியுதவி வழங்கிய மற்ற பன்னாட்டு அமைப்புகள் அனைத்தையும் சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியேற்றிவிட்டார்.

எனவே, இந்த உண்மைகளையெல்லாம் அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் ஆணித்தரமாக எடுத்துரைக்க தமிழக முதல்வரால் மட்டுமே முடியும். எனவேதான் நாம் தமிழர் கட்சி மிக அவசியமான இந்த வேண்டுகோளை விடுக்கிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+