அழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ஓட்டம்!
மதுரை: மத்திய அமைச்சர் முக அழகிரியி்ன் வலது கரம் என்று கூறப்படும் எஸ் ஆர் கோபி தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அட்டாக் பாண்டி, பொட்டுசுரேஷ், தளபதி என்று அடுத்தடுத்து திமுகவின் முக்கிய பிரமுகர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே திமுகவின் முக்கிய தூணாகக் கருதப்படும், மத்திய அமைச்சர் முக அழகிரிக்கு நெருக்கமானவர்கள்.
இந்நிலையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான மற்றொரு நபர் எஸ்.ஆர்.கோபியை கைது செய்ய போலீஸ் வளையத்தில் நெருக்கியது. ஆனால் போலீசில் சிக்காமல் தாய்லாந்து தப்பிவிட்டார் எஸ்.ஆர். கோபி.
மதுரையச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பு வகித்தவர். தற்போது திமுக பொதுக்குழுவின் உறுப்பினர்.
தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டார். வில்லாபுரம் ஏரியாவில் இவர் வீடு உள்ளது. இவரின் தம்பி போஸ் முத்தையா மதுரை அவனியாபுரம் சேர்மன் ஆக உள்ளார். மற்றொரு சகோதரர் திருப்பரங்குன்றம் திமுக ஒன்றிய செயலாளர் ஆவார்.
மதுரை திருமங்களத்தை சேர்ந்த சிவனாண்டி, அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை எஸ். பி. அஸ்ராஹாக்கியிடம் கொடுத்த புகாரில், தங்களது 5 ஏக்கர் நிலத்தை மிரட்டி வாங்கியதாக தெரிவித்திருந்தனர்.
இந்தப்புகாரின் அடிப்படையில் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷும், திமுக மதுரை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திருமங்கலம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திமுக முக்கிய பிரமுகர் தாய்மூகாம்பிகை சேதுராமன் ஆகிய நான்கு பேர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் எஸ்.ஆர்.கோபியும் நேற்று கைதாகவிருந்தார். அவர் நேற்று போலீசில் ஆஜராகாததால் இன்று மதியம் 50க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.ஆர்.கோபி வீட்டுக்குள் புகுந்து வீட்டுக்குள் சோதனை செய்தனர்.
வீட்டில் எஸ்.ஆர். கோபி இல்லை. விசாரணையில் அவர் தாய்லாந்துக்கு தப்பியிருப்பது தெரியவந்தது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். தாய்லாந்து போலீசாரிடம் தொடர்பு கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications