திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல்லூரி தலைவர் புகார்
விழுப்புரம்: விழுப்புரம் ஜெயசூர்யா கல்வியியல் கல்லூரியின் ஆவணங்களை பறித்துச் சென்றதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது விழுப்புரம் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஜெயசூர்யா கல்வியியல் கல்லூரி. இதன் தலைவர் ராயர்.
அவர் விழுப்புரம் டி.ஐ.ஜி. வினித்தேவ் வான்கடேயை சந்தித்து திமுக முன்னாள் அமைச்சர் பென்முடி மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அப்போதைய பாமக எம்.பி. தனராஜ் மூலம் விழுப்புரம் ஜெயசூர்யா கல்லூரிக்கு சொந்தமான பணம், நகை, காசோலை மற்றும் சொத்து பத்திரங்களை கொள்ளையடித்துச் சென்றார்.
அவர்கள் எங்களிடம் இருந்து அபகரித்துச் சென்றவைகளை மீட்டுத் தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தேன். அவர் இது குறித்து காவல் துறையிடம் புகார் கொடுக்குமாறு தெரிவித்தார்.
பாமகவின் தனராஜ் தலைமையில், கல்லூரிக்குள் புகுந்த குண்டர்கள் கல்லூரியில் இருந்த பணம், சொத்து பத்திரங்களை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து கேட்டதற்கு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
எனவே, இந்த சம்பவங்களுக்கு காரணமான திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்து, கொள்ளையடித்துச் சென்ற பணம், நகை, பத்திரங்கள், என்.சி.டி.இ. ஆவணங்களை மீட்டு தந்து, எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. வினித்தேவ் வான்கடே போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications