கூடன்குளம் அணுமின் நிலையத்தை நோட்டமிட்ட உபி இளைஞர் கைது
கூடன்குளம்: கூடன்குளம் அணுமின் நிலையத்தில் போலி சான்றிதழ் மூலம் பெயரை மாற்றி வேலையில் சேர்ந்த உத்தபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெல்டிங் பிரிவில் ஒப்பந்த பணியாளராக போலி பெயர் மற்றும் போலி முகவரியில் ஒரு இளைஞர் கடந்த 18 மாதங்களாக பணியாற்றி வந்தார். அவரது செயல்கள் சந்தேகப்படும்படி இருந்தது.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரைப் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் பணியில் சேர்ந்தபோது சமர்பித்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் அவர் போலிச் சான்றிதழ் மூலம் தனது பெயரை சுபாஷ் பஸ்வான் எனவும், பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்து வேலையில் சேர்ந்தது தெரிய வந்தது.
உண்மையில் அவர் உத்திரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி ஆசாத் கான் என்பவரது மகன் முகமது மீரா கான் (25) என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜீஸ்குமார் கூடன்குளம் போலீசில் புகார் செய்தார். பெயரை மாற்றி முகமது மீரா கான் பணியில் சேர்ந்ததால் அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் நெல்லை எஸ்பி விஜேயந்திர பிதாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தீவிரவாதி இல்லை என்பதும், போலி ஆவணம் மூலம் பணியில் சேர சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மீரா கானை கைது செய்தனர். மீரா கானை பணியில் சேர்த்த ஒப்பந்த மேலாளர் தற்போது வேலையிலிருந்து நின்றுவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாகச் சேர்ந்த அனைவரது சான்றிதழ்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications